நேற்று நடந்த ஐ.பி.எல் தொடரின் லீக் ஆட்டத்தில் பஞ்சாப் அணித்தலைவர் அஸ்வின், இரண்டு முறை மன்கட் அவுட் செய்ய முயற்சித்தாரா என்ற கேள்வி எழுந்த நிலையில், நெட்டிசன்கள் அவரது செயலை கடுமையாக விமர்சித்துள்ளனர்.
ஐ.சி.சி விதிமுறைகளின்படி மன்கட் அவுட் செய்யும் முறை கிரிக்கெட் போட்டியில் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக இருந்தாலும், Spirit of the Cricket துடுப்பாட்ட வீரரை எச்சரிக்கை செய்ய வேண்டும்.
ஆனால், Spirit of the Cricket-ஐ மீறி இந்த ஐ.பி.எல் சீசனில் பஞ்சாப் அணித்தலைவர் அஸ்வின், ராஜஸ்தான் அணி வீரர் பட்லரை மன்கட் முறையில் ஆட்டமிழக்க செய்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.
அதன் பின்னர் டெல்லி அணிக்கு எதிரான போட்டியில், தவானை அவர் மன்கட் அவுட் செய்ய முயன்றார். ஆனால் அது தோல்வியில் முடிந்ததால் தவானின் கிண்டலுக்கு ஆளானார். இதனால் அஸ்வின் மீது விமர்சனங்கள் எழுந்தன.
இந்நிலையில், நேற்று ஹைதராபாத் அணிக்கு எதிராக நடந்த போட்டியில் 6வது ஓவரை அஸ்வின் வீசினார். 2வது பந்தை வீச ஓடி வந்த அவர், ஸ்டெம்ப் அருகே வந்ததும் நின்றுவிட்டார். அப்போது துடுப்பாட்ட வீரர் சாஹா கிரீஸுக்குள் இருந்தார்.
இதனால் அமைதியாக சென்ற அஸ்வின், 4வது பந்தை வீச ஓடி வந்த போதும் கிரீஸ் அருகே வந்து நின்றுவிட்டு சாஹாவின் கிரீஸைப் பார்த்தார். ஆனால், அப்போது சாஹா கிரீஸுக்குள் இருந்தார். இதனை கவனித்த நடுவர் அஸ்வினை அழைத்து, பந்துவீச வந்து பாதியிலேயே இருமுறை செய்வது குறித்து கேட்டறிந்தார்.
ஆனால், அவர் மன்கட் அவுட் செய்ய முயற்சித்தாரா என்பது தெரியவில்லை. இந்நிலையில், சமூக வலைதளங்களில் பலர் அஸ்வினின் நேற்றைய செயல் குறித்து விமர்சித்து வருகின்றனர்.