வேல்ஸ்  பிலிம்  இன்டர்நேஷனல்  தயாரிப்பில்  ஜெயம்  ரவி , காஜல்  அகர்வால்  நடிப்பில்  அறிமுக இயக்குனர் பிரதீப் ரங்கநாதனின் இயக்கத்தில்  வெளிவந்திருக்கும்  திரைப்படம்  கோமாளி.

1990 காலகட்டத்தைச்  சேர்ந்த  பள்ளி  மாணவரான ஜெயம் ரவி, தன்னுடன்  படிக்கும்  மாணவி  சம்யுக்தா  ஹெட்ஜ்  மீது  காதல்  வயப்படுகிறார்.  அதற்கென, தன்  அப்பா  ‘ஆடுகளம்’ நரேன் பரிசாகக்  கொடுத்த பரம்பரை  சிலையை  சம்யுக்தாவிடம்  கொடுத்து தனது  காதலைச்  சொல்ல செல்கிறார். செல்லும்  அதே ஏரியாவில் பெரிய  ரவுடி  ஆகவேண்டும்  என்ற  ஆசையில்  இருக்கும்  கே .எஸ்  ரவிக்குமார் காத்திருக்கிறார்.

அந்த  ஊரின்  மிகப்பெரிய  ரவுடியான  பொன்னம்பலத்தை கொன்று  கே  .எஸ் ரவிக்குமார் தான்  அந்த  ஊரின்  மிகப்பெரிய  ரவுடி  ஆகவேண்டும்  என்பதற்காக, தனது  அடியாட்களுடன் ஜெயம்  ரவியை நெருங்குகிறார். ஜெயம்  ரவி சம்யுக்தாவிடம் சிலையை பரிசாகக் கொடுத்து, தனது  காதலைச்  சொல்ல  முயலும்  பொழுது   கே . எஸ் . ரவிக்குமார்  பொன்னம்பலத்தைக்  கொன்றுவிட்டு  தப்பிக்க  முயலும்  பொழுது  எதிர்பாராத விதமாக   ஜெயம் ரவிக்கு  விபத்து   ஏற்ப்பட்டு  கோமா  போகும் நிலை உண்டாகிறது.

20-ஆம் நூற்றாண்டின்  கடைசிநாள்  அன்று,  கோமா நிலைக்குச்  சென்ற  ஜெயம் ரவி  16 ஆண்டுகளுக்குப் பிறகு, கோமாவில்  இருந்து மீண்டும் சுய நினைவுக்குத் திரும்புகிறார்.  அவரை அத்தனை ஆண்டுகள் வரை, அவரது  நண்பர்  யோகி யோகிபாபு  பார்த்துக்கொள்கிறார்.  ரவி  கோமாவில்  இருந்த  16 ஆண்டுகளில் உலகம்  பல  மாற்றங்களை  அடைந்து  இருந்தது.  அந்த  மாற்றங்களுக்கு  ஏற்றவாறு   ஜெயம்  ரவியால் அவ்வளவு  எளிதில் தன்னை  மாற்றிக்  கொள்ள முடிந்ததா? அவர்  படும்  அவதியையும், அதன்பின்  கே .எஸ் . ரவிகுமாரால்  அவருக்கு  வரும்  பிரச்சனைகளையும்,  அவர்  எப்படிச்  சமாளித்தார்  என்பதைப்  பற்றி  முழுக்க  முழுக்க  நகைச்சுவை  கலந்து  சொல்லியிருக்கும்  படம்  கோமாளி.

ஜெயம்  ரவி  தனது  சிறப்பான  நடிப்பை  வெளிப்படுத்தி  இருக்கிறார். தொடர்ந்து  பல  படங்களில்  ஆக்சன்  ஹீரோவாக  பார்த்த  ஜெயம்  ரவியை  ஜாலியான  அப்பாவித்தனமான  நகைச்சுவை   கதாப்பாத்திரத்தில்  பார்ப்பது  நன்றாகவே  இருக்கிறது. 

காஜல்  அகர்வால், சம்யுக்தா ஹெட்ஜ் , தத்தம்  கதாப்பாத்திரங்களை  சிறப்பாகவே செய்திருக்கிறார்கள்.  யோகிபாபு  காமெடியில்  கலக்கியிருக்கிறார்.  நகைச்சுவையையும் தாண்டிய, தனது  குணச்சித்திர  நடிப்பை  வெளிப்படுத்தி   இருக்கிறார்.

படத்தில்  நிறைய,  சிறு  சிறு  கதாபாத்திரங்கள் இருந்தாலும்  அனைத்து கதாபாத்திரங்களுமே படத்துக்கு  பலம்  சேர்த்து  இருக்கின்றன.  ஹிப் ஹாப்  தமிழா-வின் இசை  படத்துக்கு  மிகப்பெரிய  பலம்  என்றே  சொல்லவேண்டும் . குறிப்பாக பின்னணி  இசை  பல  இடங்களில்  திரைக்கதைக்கு வலு சேர்க்கிறது. படத்தில்  வரும் நண்பா  நண்பா  பாடலைக் கேட்கும்போது, அது   நமக்குள்  மனித நேய எண்ணத்தை  வரவழைக்கிறது என்றே  சொல்ல  வேண்டும்.  ஹிப் ஹாப்  ஆதி  பாடலாசிரியராகவும் கவருகிறார்.  அவருடைய வரிகள் ஈர்க்கின்றன.  ஒளிப்பதிவாளர்  ரிச்சர்ட் எம். நாதன்  சிறந்த  ஒளிப்பதிவைத்  தந்திருக்கிறார்.  அவரது பிரேம்கள்  படத்துக்கு  பலம்  சேர்த்திருக்கிறது  என்றே  சொல்ல  வேண்டும்.  குறிப்பாக 2016ல்   சென்னையில்  வந்த  வெள்ளக்  காட்சிகளை  தத்ரூபமாகப் படம்  பிடித்திருக்கிறார்.

படத்தில்  பாடல்  காட்சிகள்  நன்றாக  வடிவமைக்கப்பட்டு  இருக்கிறது. ஆர்ட்  டிபார்ட்மென்ட்  வேலைகள்  சிறப்பாக  இருக்கிறது. ஆர்ட்  டைரக்டர் உமேஷ். ஜே. குமார்  இந்த  படத்தில்  சிறந்த  பங்களிப்பை தந்து  இருக்கிறார். பிரதீப்  ரங்கநாதன்  இந்த  படத்தில்  சிறப்பாக  பணியாற்றியிருக்கிறார்.  அவருக்கு  இது  முதல்  படமாக  இருந்தாலும்  அனுபவம்  வாய்ந்த  இயக்குனர்  போல்  பணியாற்றியிருக்கிறார்.  அவர்  இந்த  படத்தில்  ஆட்டோ  டிரைவர் ஆகப் பேசும்  வசனங்கள்  நன்றாகவே  இருக்கிறது. பிரதீப்  ரங்கநாதனுக்கு  கோமாளி சிறந்த  இயக்குனர்  அந்தஸ்தை  கண்டிப்பாகப்  பெற்றுத்தரும்  என்பதில்  எந்த  சந்தேகமும்  இல்லை.

உலகத்தில் எத்தனை மாற்றங்கள் வந்தாலும் மனிதமும் மனித உணர்வுகளும் என்றுமே மாறாது என்பதை நகைச்சுவை கலந்து சொல்லி இருக்கும் படமே கோமாளி.


Rating 3/5