மகளிர் டி20 சேலஞ்ச் கிரிக்கெட் தொடரை ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான சூப்பர் நோவாஸ் அணி வென்றது.
மூன்று அணிகளுக்கு இடையிலான மகளிர் டி20 சேலஞ்ச் கிரிக்கெட் போட்டி ஜெய்ப்பூரில் நடைபெற்றது. இந்த தொடரின் இறுதிப்போட்டி நேற்று நடந்தது. வெலோசிட்டி-சூப்பர் நோவாஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற சூப்பர் நோவாஸ் அணி பந்துவீச்சை தெரிவு செய்தது. அதன்படி களமிறங்கிய வெலோசிட்டி அணியில் அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்தன. எனினும் சுஷ்மா வர்மா 32 பந்துகளில் 40 ஓட்டங்களும், அமிலியா கெர் 36 ஓட்டங்களும் எடுத்தனர்.
இதன்மூலம், அந்த அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 121 ஓட்டங்கள் எடுத்தது. பின்னர் ஆடிய சூப்பர் நோவாஸ் அணியில் பிரியா புனியா 29 ஓட்டங்கள் எடுத்தார். ஜெமிமா ரோட்ரிகஸ் 22 ஓட்டங்கள் எடுத்து அவுட் ஆனார்.
ஒரு முனையில் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும், கேப்டன் ஹர்மன்பிரீத் நங்கூரம் போல் நின்று ஆடினார். அரைசதம் அடித்த அவர் வெற்றியை நெருங்கிய சமயத்தில் ஆட்டமிழந்தார். அவர் 37 பந்துகளில் 3 சிக்சர், 4 பவுண்டரிகளுடன் 51 ஓட்டங்கள் எடுத்தார்.
சூப்பர் நோவாஸ் அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 125 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன்மூலம் சாம்பியன் பட்டத்தையும் கைப்பற்றியது.

0 Comments